ஏடிஎம் இயந்திரம் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம்(History of ATM machine)

Articles

Ads1

ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் .

இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் தேதியன்று காலமானார்.
Ads2

Post a Comment

Previous Post Next Post