தலைமைப்பண்பின் அவசியமும் அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளும்!!


 தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆளுவதும் மட்டும் இல்லை. நம் வாழ்க்கையில் ஏற்படும் சாதகமற்ற சூழல்களில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நமக்கு தேவையான தெளிவையும் மனத்திடத்தையும் அளிப்பதுதான் உண்மையான தமைமைப்பண்பு ஆகும்.

தலைமைப் பண்பின் அவசியம் :
✴ வீட்டில் உள்ள சூழல்களுக்கும் வெளியுலகத்தில் இருக்கும் சூழல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
✴ வீட்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படலாம். நீங்கள் விழுவதற்கு முன்பே உங்களை தூக்கிப் பிடிக்கலாம். உங்கள் மனம் கோணாமல் உங்கள் தவறுகள் கண்டிக்கப்படலாம். ஆனால், வெளியுலகம் இதற்கு முற்றிலும் மாறானது.
✴ ஆகையால் வெளியுலகத்தை எதிர்கொள்வதற்கு, நீங்கள் கீழே விழுந்தாலும் தானே எழுந்து நிற்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
✴ இத்தகைய திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வதற்கு தலைமைப் பண்பு மிக அவசியம் ஆகும். கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களின் தலைமைப் பண்பை நீங்கள் நன்றாக வளர்த்துக் கொள்ளலாம்.
பொறுப்புகளை விரும்பி ஏற்றல்:
✴ நிறைய பொறுப்புகளை விரும்பி ஏற்பது, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறை ஆகும்.
✴ மேலும், கூடுதல் பொறுப்புகளை ஏற்பதன் மூலம் நம்முடைய ஆற்றலின் அளவையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
பின்பற்றுதல்:
✴ கண்மூடித்தனமாக ஒருவரை பின்பற்றுவது மடமையாகும். அதற்காக யாரையும் பின்பற்றக்கூடாது என்பது இல்லை. சில விஷயங்களில் நம்மைவிட சிறந்தவர்களை நாம் பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை.
✴ மேலும், நம்மை விடச் சிறந்தவர்களை போட்டியாளராகக் கருதாமல் அவர்களை மதித்து உரிய மரியாதையை அளிப்பதும் சிறந்த தலைமைப்பண்பாகும்.
விழித்திருத்தல்:
✴ சூழ்நிலையை நன்றாக உணர்ந்து, அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை வரும் முன்னரே யூகிப்பதுதான் சிறந்த தலைமைப் பண்பாகும்.
✴ ஒரு சூழலை நன்றாக உணர்வதற்கு, முதலில் நமது சூழலைக் குறித்த விழிப்புணர்வு எப்பொழுதும் இருக்க வேண்டும். அதில் அவ்வப்போது வரும் பிரச்சனைகளையும் கவனித்து, அதை சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
✴ மேலும், பிரச்சனைகள் நேராமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா என்பதையும் யோசிக்க வேண்டும்.
பிறரை ஊக்குவித்தல்:
✴ தன் வேலையை மட்டும் சிறப்பாகச் செய்வது தலைமைப் பண்பிற்கான அடையாளம் அல்ல. தன் குழுவில் உள்ளவர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அந்த ஊக்கம் அவர்களின் சிறந்த திறனை வெளிப்படுத்த செய்வதாக இருக்க வேண்டும். இதுவே சிறந்த தலைமைப் பண்பிற்கான அடையாளம் ஆகும்.
✴ எனவே, யாரையும் போட்டியாக கருதாமல், அனைவரின் திறமைகளையும் நீங்கள் அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் உங்களுடைய சிறிய ஊக்குவிப்பு கூட பிறரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2