சில ஞாயங்களும், சில தர்மங்களும்.. (சிறுகதை)



சென்னை  ஏர்போர்ட்டை விட்டு லக்கேஜ் உடன் வெளியே வந்து ஆட்டோ பேசினேன் பெருங்களத்தூருக்கு...
காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைப்பாஸ் வழியே கிண்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது.நான் சிதம்பரம் போக வேண்டும்..

ஆட்டோ.. பெருங்குளத்தூர் எவ்வளவுப்பா..? என்றேன் 500-ரூபாய் என்றான்...

400-ரூபாய்க்கு வருவியா என்றேன்,.. சா....ர் கேட்டுப் பாருங்க சார்..
சரி சார் 450 ரூபாய் ஏறுங்க சார் என்றான்...

சென்னைக்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது.தாம்பரம் தாண்டியது..

ஏம்பா தம்பி நீ இந்த வழியா சவாரி போனா எங்க காலை டிபன் சாப்பிடுவ...? என்றேன்... ரோட்டுக்கடைத் தான் சார் என்றான்..

அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டுப் போவோம் என்றேன்..

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமர ஓரமா இருந்த தள்ளுவண்டி கிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா.. நெற்றி நிறைய திருநீறு.. பொட்டு இல்லை...கழுத்தில் தாலி இல்லை விதவை எனச் சொல்லியது தோற்றம்.

வாங்க சார் என்றாள்.

இங்க தான் சார். வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றான்....

இட்லி... வடை... பொங்கல்... பூரி... மசாலாடீ.. எனக் கட்டினோம்..

எவ்வளவும்மா என்றேன்..?
150-ரூபாய் சார் என்றாள் 200-ரூபாய் கொடுத்தேன்...

மீதி சில்லரையாகத் தேடியது அந்த அம்மா... 

ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, போக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல் சார் என்றாள்...

சரிம்மா 50 ரூபாய வச்சிக்க, நாளைக்கு இந்தப் பக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்.. என்று கூறிப் புறப்பட்டோம்...

ஆட்டோக்காரர் கேட்டார்..! சார் நீங்க சிதம்பரம் போறீங்க.. நாளைக்கு வருவேன்னு ,50 ரூபாய அந்த அம்மா கிட்ட விட்டுட்டு வர்ரீங்க என்றான்..?

தம்பி இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹேட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 500 ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600 ரூபாய் கொடுத்திருப்போம்...  இல்லையா....?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் தம்பி.. என்றேன்.

சங்கம் அமைப்பது.. வசூல் செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. புண்ணியத் தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என இப்படித் தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை. தம்பி நடைமுறை வாழ்க்கையிலே இப்படியும் தேடலாம்பா என்றேன்..

ஹைவேயில் ஓரம் மலை.. மரங்கள்... தொடர்ந்து வரும் ரயில்வே லைன்..  பயணிகள் பஸ்.. லாரி.. கார்... அத்துடன் இளங்காலை காற்று இதமான சவாரி கடந்து..
பெருங்குளத்தூர் வந்தது.. இந்தாப்பா நீ கேட்ட 450 ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..

400-ரூபாய் போதும் சார் என்றான்....!_
ஏம்பா என்றேன்...?
அந்த 50-ரூபாய் உங்கக் கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன்மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும் சார் என்றான்...!

நான் போடும் புண்ணியக் கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோக்காரரின் புண்ணியக் கணக்கு...!

தொடரட்டும் நமது புண்ணியக் கணக்குகள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Articles

Ads1
Ads2